image

முரண்..

இறைவனின் வாகனம் என்றான் நாயை

அவதாரம் என்றான் பன்றியை

இறைவனே என்றான் குரங்கை

இவனே திட்டினான் என்னை

நாயே! பன்றியே! குரங்கே!

நாற்காலி..

இங்கே வேறுபாடு அதிகம் இல்லை

நாற்காலிக்கும் கட்டிலுக்கும்.

வீடு தூங்க கட்டில்

நாடு தூங்க நாற்காலி

ஞானம்..

ஞானம் பெற்றது

நீ-உன்மண்ணில் பள்ளிக் கூடங்கள்

கட்டப்பட்டதால் நான்-என் மண்ணில்

பள்ளிக்கூடங்கள் இடிக்கப்பட்டதால்.

பாடம்..

புரட்சியாவது வெங்காயமாவது

என்கிறாய்

தெரிந்து பேசு

காயப்படுத்தியவனின் கண்ணீரை

வாங்கும் வெஙகாயம்.

சென்னிரை வாங்கும் புரட்சி

கோயில்..

செருப்புகளை வெளியே விட்டு

உள்ளே போகிறது அழுக்கு.

தளை..

கணவனிடம் ஓப்புதல் கேட்கிறாள்

பெண்கள் விடுதலை அமைப்பில்சேர.

வில்..

வீழ்ந்த தமிழன் கதையை

விம்மி விம்மி பாடிக்கொண்டிருக்கிறது

மேடையில்-

வெட்கம் கெட்ட வில்

பெண்மை..

தெரிவது உனக்கு அவள் கண்களில்

வண்டும் மீனும் பூவும்

தெரிவதில்லை கண்ணீர்

வெறி..

எரியவில்லை அடுப்பு சேரியில்.

போராடினோம்…

எரிந்ததுஅடுப்பல்ல-சேரி

வீரம்..

உன் கனவில் பாம்பு துரத்துகிறது

நீ ஓடுகிறாய்

குறவன் அவன் துரத்துகிறான்

பாம்பு ஓடுகிறது

வீரம் தொழிலாளிக்கு .

சாமி..

எங்கள் குடிசையில்

அடிக்கடி சாமி ஆடுவாள்

அம்மா ஏனோ தெரியவில்லை

அன்றும் இன்றும்

குடிசைக்கே வருகிறது சாமி

மாடிக்கே போகிறது வரம்.

நிழல்..

எதிரிகளால் அழிக்கப்பட்டன எங்கள் காடுகள்

நிமிர்ந்தோம்

இன்று-போராளிகளின் நிழலில் மரங்கள்

மாவீரன்..இது உயிருக்கு வந்த சாவு அல்ல

சாவுக்கு வந்த உயிர்;

போர்..

ஊரில் உங்கள் சுடுகாடு.

சுடுகாட்டில் எங்கள் ஊர்.

உறுத்தல்..

இரவெல்லாம் விழித்திருந்து

எங்களுர் ஆச்சி இழைத்தபனைபபாய்…

வாங்கினேன் உறங்குவது எப்படி

இவள் பாயில்?

மனிதன்..

இவன் பசுவின் பாலைக்கறந்தால்

பசு பால் தரும் என்கிறான்.

காகம் இவன் வடையை எடுத்தால்

காகம் வடையை திருடிற்று என்கிறான்

இப்படியாக மனிதன்….

மானம்..

உன் கோவணம் அவிழ்க்கப்பட்டதா?

அவன் கைகளை வெட்டு

கெஞ்சி கோவணம் கட்டாதே

அம்மணமாகவே போராடு.

அறுவடை..

திரைப்படச்சுவரொட்டியை

தின்றகழுதை கொழுத்தது

பார்த்த கழுதை புழுத்தது

மந்தை..

மேடை

தமிழா!

ஆடாய் மாடாய்

ஆனாயடா…

நீ என்றேன்

கைதட்டினான்

பெண்..

ஏடுகளில் முன்பக்கத்தின்

அட்டையில்

வீடுகளில் பின்பக்கத்தில்

அடுப்பங்கரையில்.

கோடை..

தங்க வளையலைக்கழற்றி

போராளியிடம் தந்தாள்

செலவுக்குவைத்துக்கொள்

உங்களில் பலருக்கு

கைகளே இல்லை

எனக்கு எதுக்கு வளையல்.

திமிர்..

வேலைக்காரன்மேல் பாய்ந்தார்

நாயே பீட்டரை கவனித்தாயா?

இவர் வீட்டில் பீட்டர் என்றால் நாய்

நாய் என்றால் மனிதன்

கொலை..

ஒரு நாள் வாழ்க்கை பூவுக்கு…

விரியுமுன்பே பறித்து

இனறவனுக்கு அர்ச்சனை

செய்கிறான்

நூறாண்டு வாழ்ககை வேண்டி தனக்கு

அடக்கம்..

அடக்கம் செய்யப்படுகிறோம்…

இரண்டு பெட்டிகளில்.

சவப்பொட்டியிலும்

தொலைக்காட்சிப் பெட்டியிலும்

உலகமைதி..

மாந்த நேயம் பேசின அணுகுண்டுகள்

புறாக்களை பறக்கவிட்டன கழுகுகள்.

போராடிக்கொண்டிருக்கிறது அமைதி.

அடி ..

கலையை கலைஞனை

போற்றிய நாடிது என்கிறாய்…

காலம் காலமாய்

பறையை பறயனை தாழ்த்திய நீ.

ஆணாதிக்கம்..

எப்படியும் இருக்கலாம்

ஆணிண் திமிர்

திரௌபதைக்கு கணவன் ஐந்தாகவும்

அர்ச்சுனனுக்கு மனைவி ஐந்தாகவும்

வேலி..

மயில் இறகு புலித்தோல்

மான் கொம்பு யானைத்தந்தம்

அழகாய் இருக்கிறது எங்கள் வீடு.

வனவிலங்குகள் காப்பாளர் அப்பா

காலம்..

உன் கையிலா கடிகாரம்?

கடிகாரத்தின் கையில் நீ.

கடற்கரை..

உடல் நலம் தேடி

காற்றுவாங்க வந்து போகும்

பெரியஇடத்து மாடிகள்

இங்கேயே நோயோடும் நொடியோடும்

ஒடுங் கிடக்கும் மீனவர் குடிசைகள்

நிலவு..

புராணமாய் இறைவனின் தலையில்

வரலாறாய் மனிதனின் காலில்.

இருள்..

பகலிலும் தலைவர்கள் குத்துவிளக்கு ஏற்ற

நிகழ்ந்தன விழாக்கள்.தேடுகிறோம்…

எங்கேவெளிச்சம்?

தாஜ்மஹால்..

காதலி புதைக்கப்படட இடம் காட்டுகிறாய்

காதலை புதைத்த இடம் காட்டு

எங்கே ஷாஜஹானால் கசக்கி எறியப்பட்ட

அந்தப்புரப்பெண்களின் கறுப்புகல்லறைகள்?

புலமை..

கண்ணீர் சிந்துகிறோம் கண்ணீருக்காக

இவன் உவமைகளும்…முத்துக்கள்

என்றானே கண்ணீரை!

பால்..

என்னைத் தெய்வம் ஆக்கினாய்

சிவன்பாதி சக்திபாதி என்றாய் ஏமாற்றாதே-

உன்பால் வேறுபாடு அழுத்தமானது

சிவனுக்கு பசுப்பாலும் சக்திக்குகள்ளிபாலும்

அரண்..

என் வலகையில் ஐந்துவிரல்கள்

உண்ணவும் வணங்கவும் மட்டுமல்ல

அறையவும்தான்.

தேர்தல்..

மாலை வளையல் ழூக்குத்தி

பென்னான எதுகும் இல்லை

எங்கள் குடிசையில்.

அவன் செல்கிறான்

இருக்கிறதாம் எங்களிடம்…

பொன்னான வாக்குகள்

இனவெறி..

மாடுகள் காணாமல்போகும் என்று

தோலில் குறிபோடும் எங்கள் மண்

கொஞ்சநாளாய்…

மனிதர்களையே காணவில்லையே.

குப்பைத்தொட்டி..

அலுவலகத்தில் இருக்கிறவனுக்

இது குப்பைத்தொட்டி

குப்பை பொறுக்கி வாழ்கிறவனுக்கு

இதுஅலுவலகம்.

ஏழ்மை..

சதை பிடித்து விடுகிறாள்

அழகு நிலையத்தில்

எலும்புக்கைகளால்

கண்ணோட்டம்..

செருப்பைப்பார்கையில் நீங்கள்

அணிந்திருக்கிறவனின்

காலைப்பார்க்கிறீர்கள்.

நான் செய்தவனின்

கையைப்பார்க்கிறேன்

நிமிர்வு..

தேவை பயில்வன்களல்ல வீரர்கள்

உன் உடலின் கூனல்பற்றிய கவலைவிடு

வில்லில் இல்லாத நிமிர்வா?

கூண்டு..

விடுதலை ஆவாரா சிறையில்

இருந்து என்கணவர்?

சோதிடம கேட்கிறாள்

கூண்டுக்கிளியிடம்

மண்..

என்னை என் மண்ணில்

புதைத்தாய் பகைவனே!

என் மண்ணை

எங்கே புதைப்பாய்?

குடுகுடு..

நல்லகாலம் வருகுது

நல்லகாலம் வருகுது..

தெருவிலேயே நிற்கிறான்

குடுகுடுப்பைக்காரன்.

2 Comments:

  1. ரோஸ்விக் said...
    வரிகள் அனைத்தும் பல இதயங்களை கொல்லும் & வெல்லும் வகையில் உள்ளது. கவிஞருக்கு எனது வணக்கங்கள்.

    பதிவிற்கு நன்றிகள்!
    மு.இரா said...
    நன்றி, ரோஸ்விக்.

Post a Comment